முன்னாள் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச விரைவில் கைது செய்யப்படுவார் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள பல குற்றவாளிகள் நாட்டைவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக கூறிய அவர், விரைவில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தற்போது அமெரிக்காவில் இருக்கும் பசில் ராஜபக்ச விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த நிலையில், உடல்நிலையைக் காரணம் காட்டி அவர் இலங்கை வருகையை தவிர்த்திருந்தார்.
இதனையடுத்து, பசில் ராஜபக்சவை கைது செய்யுமாறு நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இவர் வெளிநாட்டுக்கு சென்றிருந்தார்.
இந்நிலையில் இவருக்கு எதிராக மீண்டும் பகிரங்க சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நாட்டில் இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்கள், போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்கள், பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடையவர்கள் என பல குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தமது உரையில் குறிப்பிட்டார் .
இருந்த போதிலும் பலருக்கு விசாரணைக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பலர் மீதான வழக்குகள் உள்ளன. சிலருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு சென்று தங்களுக்கான வழக்குகளை தொடர முடியும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
