இலங்கை அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே, தான் மேற்கொண்டு வந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவு செய்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவருடைய சட்ட ஆலோசகரின் அறிவுரை மற்றும் கோரிக்கைகளை ஏற்று அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக கடந்த பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி சுரேஷ் சலே கைது செய்யப்பட்டார்.
இந்தநிலையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்தபோது அவர் உண்ணாவிரதத்தைத் தொடங்கியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு இரண்டு வாரங்களுக்கும் மேலாக மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் தொடர்ந்தும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
