”ஒரே குண்டு போதும் ஒட்டுமொத்தமாக வீழ்த்த” – கமேனி இறுதிச் சடங்கு குறித்த ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை

“ஈரானின் முன்னாள் உயர் தலைவரான அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு நிகழ்வுகளின் போது, அந்நாட்டின் உயர்மட்டத் தலைவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடியிருந்தனர். நான் நினைத்திருந்தால் ஒரே குண்டை வீசி அனைவரையும் வீழ்த்தியிருக்க முடியும்” என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேசியமை சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

வாஷிங்டனில் ஒரு செய்தி நிறுவனத்திடம் பேசிய ட்ரம்ப், “தெஹ்ரானில் அயதுல்லா கமேனிக்கு பிரம்மாண்டமான இறுதிச் சடங்கு நிகழ்வுகள் நடக்கிறது. இந்த நிகழ்வு எங்களுக்கு ஒரு ராணுவ வாய்ப்பை அளிக்கிறது. ஆனால், தற்போதைய ராஜதந்திர முயற்சிகள் காரணமாக அந்த வாய்ப்பை நாங்கள் பயன்படுத்திக்கொள்ளப் போவதில்லை.

ஈரானின் உயர்மட்ட தலைவர்கள் அனைவரும் அங்கேதான் ஒரே இடத்தில் உள்ளனர். ஒரே குண்டு போதும், அவர்களை ஒட்டுமொத்தமாக வீழ்த்திவிடலாம். ஆனால் நாங்கள் அதைச் செய்யப்போவதில்லை; ஏனெனில் அப்படிச் செய்தால் பேச்சுவார்த்தை நடத்த ஆள் இல்லாமல் போய்விடும்.

பெரும்பாலான ஈரானியர்கள் அயதுல்லா அலி கமேனியை எதிர்த்தனர். ஆனால், அஞ்சலி செலுத்த பெருந்திரளான மக்கள் கூடியுள்ளனர். ஒருவேளை அவர்களுடையது போலியான கண்ணீராக இருக்கலாம். அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள ஈரான் தலைவர்கள் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். இறுதிச் சடங்கு நிகழ்வுகள் முடியும் வரை ஒரு வார காலத்திற்குப் பேச்சுவார்த்தைகளை நிறுத்தி வைக்க இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளோம்” என்றார்.

ட்ரம்ப்பின் இந்த கருத்துகளுக்கு உடனடி பதிலளித்த ஆர்மீனியாவில் உள்ள ஈரான் தூதரகம், “உங்களுக்கு நாகரிகமோ, வரலாறோ, கண்ணியமோ இல்லாததால் இப்படிப் பேசுகிறீர்கள். இத்தகைய விஷயங்களை உங்களால் புரிந்துகொள்ள முடியாது” என்று தெரிவித்துள்ளது. ஈரான் – அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ட்ரம்ப்பின் இத்தகைய பேச்சு இரு நாட்டு உறவில் மீண்டும் சலசலப்பை உருவாக்கியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles