ஈரான்மீது அமெரிக்கா புதிய தாக்குதல்களை நடத்திவரும் நிலையில் , கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரித்துள்ளது.
ஈரான் மீது புதிய தாக்குதல்கள் நடத்தப்படும் என்று அமெரிக்க டொனால்ட் டிரம்ப் எச்சரித்ததைத் தொடர்ந்து, இரு முக்கிய கச்சா எண்ணெய் குறியீடுகளும் கடந்த இரண்டு வாரங்களில் இல்லாத அளவுக்கு மிக உயர்ந்த மட்டத்தில் நிலைபெற்றன.
புதன்கிழமை வர்த்தக அமர்வின் முடிவில் பிரெண்ட் கச்சா எண்ணெய் (Brent crude) விலை 5% இற்கும் மேல் உயர்ந்து $78.02 ஆக நிலைபெற்றது.
அதைத்தொடர்ந்து நடந்த பிந்தைய வர்த்தகத்தில், மேலும் உயர்ந்து ஒரு பீப்பாய் $79.28 ஆக விற்பனையானது.
அதேபோல், அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI கச்சா எண்ணெய்) விலை அதன் வர்த்தக முடிவு மட்டமான $73.52-லிருந்து உயர்ந்து, ஒரு பீப்பாய் $74.76 ஆக விற்பனை செய்யப்பட்டது.
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தைத் தடையின்றி திறந்தே வைத்திருக்கும் நோக்கில், ஈரான் மீது புதிய தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளைத் தலைமையகம் புதன்கிழமை அறிவித்தது.
செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல்களை விட, தற்போது ஈரான் மீது அமெரிக்கா நடத்தி வரும் தாக்குதல்கள் பெரிய அளவில் இருக்கும் என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
இதற்கிடையில் பந்தர் அப்பாஸ் அபு மூசா , புஷெர் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
