ஈரானின் உச்ச தலைவராக இருந்த தனது தந்தை அலி கமேனி படுகொலை செய்யப்பட்டதற்கு, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் மீது கடுமையான பழிவாங்கல் நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி சபதம் செய்துள்ளார்.
இது தொடர்பாக ஈரானிய அரசுத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட மொஜ்தபா கமேனியின் எழுத்துப்பூர்வ அறிக்கையில், “பழிவாங்குவது என்பது ஒட்டுமொத்த தேசத்தின் கோரிக்கையாகும்; அது நிச்சயமாக நிறைவேற்றப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
“மறைந்த எமது தலைவர் மற்றும் இந்த இரு யுத்தங்களிலும் தியாகிகளான அனைவரினதும் இரத்தத்திற்காக, அந்தப் படுகொலையைச் செய்த குற்றவாளிகளிடமிருந்தும் இழிந்த கொலையாளிகளிடமிருந்தும் நாங்கள் பழிவாங்குவோம் என உறுதியளிக்கிறோம்.
ஈரானின் இந்தப் பழிவாங்கல் நடவடிக்கை முற்றிலும் தவிர்க்க முடியாதது” என்றும் மொஜ்தபா கமேனி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தன் தந்தை கொல்லப்பட்ட அந்த வான்வழித் தாக்குதலுக்குப் பிறகு மொஜ்தபா கமேனி இதுவரை பொதுவெளியில் தோன்றவில்லை என்பதும், அந்தத் தாக்குதலில் அவர் பலத்த காயமடைந்துள்ளதாக அமெரிக்கா உரிமை கோரி வருவதும் குறிப்பிடத்தக்கது.
