சிங்கப்பூரின் கிளமென்டியில் நேற்று வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார். தீயணைப்பாளர்கள் இருவர் காயமுற்றனர்.
வெள்ளிக்கிழமை இரவு மணி 11.10க்கு கிளமென்டி அவென்யூ 4ல் உள்ள புளோக் 309இல் ஏற்பட்ட தீ விபத்து குறித்துத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
தீயணைப்பாளர்கள் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, எட்டாம் தளத்தில் உள்ள ஒரு வீட்டின் வரவேற்பறையில் நெருப்பு எரிந்துகொண்டிருப்பதைக் கண்டனர். வரவேற்பறையில் இருந்த பொருள்களைச் சூழ்ந்திருந்த தீயை அணைக்க, அவர்கள் கதவை உடைத்து வீட்டிற்குள் நுழைந்ததாகக் கூறப்பட்டது. தண்ணீரைப் பீய்ச்சியடித்து அவர்கள் தீயை அணைத்தனர்.
சமையலறையில் சிக்கியிருந்த ஒருவர் மீட்கப்பட்டு, இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
நினைவிழந்த நிலையிலிருந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார் எனவும் பின்னர் அங்கு மரணமடைந்தார் எனவும் ஹாலந்து-புக்கிட் தீமா குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சிம் ஆன் சமூக ஊடகப் பதிவொன்றில் குறிப்பிட்டார். வீட்டில் அவர் தனியாக வசித்து வந்தார் என அவர் மேலும் தெரிவித்தார்.
பணியின்போது தீக்காயங்கள் ஏற்பட்ட தீயணைப்பாளர்கள் இருவர் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
