நாட்டிற்குள் போதைப்பொருளைக் கடத்த முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட மலேசிய விமானி ஒருவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மலேசிய அரச காவல்துறை தலைமையகமான புக்கிட் அமான் இந்தோனேசிய அதிகாரிகளுடன் ஒத்துழைக்கும் என்று தெரிவித்துள்ளது.
அடுத்தகட்ட நடவடிக்கையைத் தீர்மானிப்பதற்கு முன்பு, காவல்துறையினர் தங்கள் சகாக்களிடமிருந்து கூடுதல் விவரங்களுக்காகக் காத்திருப்பதாக போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஹுசைன் உமர் கான் கூறினார் என நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சந்தேக நபரை நேர்காணல் செய்வதற்கும், வழக்கின் முழுமையான சூழ்நிலைகளை அறிவதற்கும், புலனாய்வாளர்கள் குழுவை இந்தோனேசியாவிற்கு அனுப்புவதா என்பது குறித்து அதிகாரிகள் பரிசீலித்து வருவதாக அவர் விளக்கினார்.
போதைப்பொருள் எங்கிருந்து பெறப்பட்டது, விமானி தனியாகச் செயல்பட்டாரா அல்லது ஒரு கடத்தல் கும்பலுடன் இணைந்து செயல்பட்டாரா என்பதை இந்த விசாரணை ஆராயும். சந்தேக நபர் எத்தனை முறை இதேபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கலாம் மற்றும் அவர் ஒரு பரந்த வலையமைப்பின் பகுதியாக இருந்தாரா என்பதையும் புலனாய்வாளர்கள் கண்டறிய விரும்புவதாக ஹுசைன் கூறினார்.
இந்தோனேசியாவிற்குப் புறப்படுவதற்கு முன்பு, சந்தேக நபர் மலேசியாவில் உள்ள விமான நிலையப் பாதுகாப்பை எவ்வாறு கடந்தார் என்பதையும் புலனாய்வாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
எம்.எஸ்.ஓ என மட்டும் அடையாளம் காணப்பட்ட 39 வயது விமானி, ஜகார்த்தாவின் சோகர்னோ ஹட்டா சர்வதேச விமான நிலையத்தில், தனது பயணப் பையில் 70,000 இற்கும் மேற்பட்ட எக்ஸ்டஸி மாத்திரைகள் மற்றும் கைப்பெட்டியில் சிறிதளவு மெத்தம்பெத்தமைன் ஆகியவற்றுடன் கைது செய்யப்பட்டதாக ஏ.எஃப்.பி செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தோனேசியாவிற்கு இரண்டு முறையும், மலேசியாவிற்கு ஒரு முறையும் என இது தனது மூன்றாவது கடத்தல் முயற்சி என்று அவர் ஒப்புக்கொண்டதாக புலனாய்வாளர்கள் வெளிப்படுத்தினர்.
