குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 24ஆம் திகதிக்கு களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
1990ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரையை முடித்துவிட்டு கல்முனை வழியாக காத்தான்குடி நோக்கிப் பயணித்த முஸ்லிம்கள் ஆயுததாரிகளால் குருக்கள்மடத்தில் இடைமறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கு நேற்று மேலதிக விசாரணைக்காக நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
கடந்த தவணையில் சம்பவம் தொடர்பாக சோகோ அதிகாரிகள், பிரதான சட்ட வைத்திய அதிகாரி, மட்டக்களப்பு காணி பதிவாளர், பிரதேச செயலாளர், தொல்லியல் திணைக்களம் மற்றும் காணாமலாக்கப்பட்டோர் அலுவலகம் ஆகியவற்றுக்கு நீதிமன்றம் அறிவித்தல் அனுப்பியிருந்தது.
எனினும், நேற்று விசாரணையில் காணாமலாக்கப்பட்டோர் அலுவலகத்தின் சார்பில் சட்டத்தரணி ஒருவர் மட்டும் ஆஜராகியிருந்த நிலையில், ஏனைய தரப்பினர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. இதையடுத்து, மேலதிக நடவடிக்கைகளுக்காக வழக்கு எதிர்வரும் 24ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
