இலங்கை சிறையில் உள்ள அனைத்து மீனவர்கள், படகுகளை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதிய கடித்ததில், ‘ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டு, படகும் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் குறித்து தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.
இச்சம்பவத்தில் இயந்திரக் கோளாறால் படகு நெடுந்தீவு கரையை ஒட்டி தரைதட்டி நின்ற நிலையில், சர்வதேச கடல் எல்லையைத் தாண்டியதாக கூறி, படகு, மீனவர்களை சிறை பிடித்துள்ளனர்.
நமது மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து செய்து வருவது மீனவ சமூகத்தினரிடையே ஆழ்ந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளதுடன், அவர்களின் வாழ்வாதாரத்தை பாதித்து பாக்ஜலசந்தியை நம்பி வாழும் மீனவர்களின் மத்தியி்ல் நிலையற்ற தன்மையை உருவாக்கியுள்ளது.
எனவே, உரிய தூதரக வழிமுறைகள் வாயிலாக இலங்கை அரசுடன் பேசி, ஏற்கெனவே சிறைபிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களையும், அவர்கள் படகுகளையும் விரைவாக விடுவித்து, பாதுகாப்பாக தாயகம் திரும்ப தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இப்பிரச்சினை குறித்து கூட்டு செயல்பாட்டுக்குழு மூலம் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை விரைவாக நடத்துவது மட்டுமே இது போன்ற பிரச்சினைகள் மீண்டும் மீண்டும் நிகழா வண்ணம் தீர்வு காண்பதற்கு உதவும்.
மீனவர்களின் வாழ்வாதாரம், நலன்களை பாதுகாக்க தாங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.
