


வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் இன்று புதன்கிழமை ஆலயத் தீர்த்தக் கேணியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ வெகு விமர்சையாக நடைபெற்றது.
கடந்த ஓகஸ்ட் 03ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய இப்பெருவிழாவின் 10ஆம் நாளான இன்று ஆடி அமாவாசை புண்ணிய தினத்தில் இத்தீர்த்தோற்சவம் இனிதே இடம்பெற்றது.
ஆலயத்தில் நடைபெற்ற விசேட அபிஷேக மற்றும் பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து, வசந்த மண்டப பூஜை சிறப்பாக நடைபெற்றது.
அதன் பின்னர் சுவாமி வெளிவீதி உலா வந்து, வேத பாராயணங்கள் முழங்க, பக்தர்களின் ‘அரோகரா’ கோஷத்திற்கு மத்தியில் மாமாங்கேஸ்வரர் தீர்த்தக் கேணியில் தீர்த்தோற்சவம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனிதத் தீர்த்தத்தில் நீராடி இறைவழிபாட்டில் ஈடுபட்டனர்.
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப்பெற்று, ஸ்ரீ இராம பிரானால் வழிபடப்பட்டதாக வரலாற்றுத் தொன்மையும் புகழும் மிக்க இப் புண்ணிய தலத்தில், ஆடி அமாவாசை தினத்தில் பிதிர்கடன் செலுத்தி ஆத்ம சாந்தி பிரார்த்தனைகளில் ஈடுபடுவது இவ்வாலயத்தின் தனிச்சிறப்பாகும்.
அந்த வகையில் ஏராளமான பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்குப் பிதிர்கடன் செலுத்தி வழிபட்டனர்.
