ஹோர்முஸ் நீரிணை ஈரானின் உத்தரவுகளுக்கு மட்டுமே மூடப்பட்டு திறக்கப்படும் என ஈரானிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போரில், சர்வதேச எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையைக் கைப்பற்ற அமெரிக்க படைகள் மும்முரம் காட்டி வருகின்றன.
இதனைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணையை முழுவதுமாகக் கைப்பற்றி விரைவில் அமெரிக்காவின் பகுதியாக அறிவிப்பேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று கூறியிருந்தமை பெரும் பேசுபொருளாகியுள்ளது.
இந்த நிலையில், அதிபர் டரம்ப்பின் பேச்சுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரிபாபாதி, ஹோர்முஸ் நீரிணை ஈரானின் உத்தரவுகளுக்கு மட்டுமே மூடப்பட்டுத் திறக்கப்படும் எனக் கூறியுள்ளார்.
இதுபற்றி, இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“ஹோர்முஸ் நீரிணை ஈரானைச் சேர்ந்தது, ஈரானிடம் உள்ளது, ஈரானிடமே நிலைத்திருக்கும்.
இந்த நீரிணை ஈரானின் உத்தரவுகளுக்கு மட்டுமே மூடப்பட்டுத் திறக்கப்படும். நீங்கள் உங்கள் தோல்வியை ஏற்று உங்களின் கற்பனைகளைக் கைவிடும் வரையில் ஈரான் முடக்கத்தைத் தொடரும்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஈரான் உடனான போரின் முதல் இலக்கு ஹோர்முஸ் நீரிணையைக் கைப்பற்றி கச்சா எண்ணெய் விலையைக் குறைப்பதுதான் என அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
