14 வெளிநாடுகள் உடன் இணைந்து செங்கடல் பாதுகாப்புக்கான கூட்டணியை உருவாக்கியுள்ளதாக சவூதி அரேபியா அரசு அறிவித்துள்ளது.
ஈரானுக்கு எதிரான போரில், அமெரிக்காவுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறி, செங்கடல் பகுதியில் சவூதி அரேபியாவின் கப்பல்களுக்கு யேமனின் ஹௌதி படைகள் தடை விதித்துள்ளன.
உலகின் 12 சதவிகித வணிகப் போக்குவரத்து நடைபெறும் செங்கடல் பகுதியின் நுழைவு வாயிலான பாப் அல்-மண்டாப் நீரிணையை ஈரானின் ஆதரவு பெற்ற ஹௌதிகள் கட்டுப்படுத்தி வருவதால், அவ்வழியாகச் செல்ல முயலும் சவூதி கப்பல்கள் மீது ஹௌதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், பாப் அல்-மண்டாப் நீரிணை, செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா பகுதியில் செல்லும் கப்பல்களின் பாதுகாப்பிற்காக செங்கடல் பாதுகாப்புக் கூட்டணியை உருவாக்க சவூதி அரசு கடந்த ஜூலை 30 அன்று முன்மொழிந்தது.
இதனைத் தொடர்ந்து, இந்தக் கூட்டணிக்கான கூட்டறிக்கையில் 15 நாடுகள் கையெழுத்திட்டுள்ளதாகவும், அதில் 13 நாடுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அதிகாரப்பூர்வமாகக் கூட்டணியில் இணைந்துள்ளதாகவும் சவூதி அரசின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
பஹ்ரைன், வங்கதேசம், கொமொரோஸ், ஜிபூட்டி, எகிப்து, சோமாலியா, சூடான், துருக்கி மற்றும் யேமன் (சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசு) ஆகியவை இந்தக் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
முன்னதாக, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போரில் வளைகுடா நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்க தாக்குதல்களுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளின் முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
