இலங்கையில் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு கடத்திய சம்பவம் தொடர்பில், பிரதான நான்கு தனியார் வங்கிகளின் நான்கு முகாமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதியியல் குற்றப் விசாரணை பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நான்கு பேரும் சம்பந்தப்பட்ட தனியார் வங்கிகளுக்குள்ளேயே வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் இவ்வாறானதொரு கைது நடவடிக்கை இடம்பெற்ற முதலாவது சந்தர்ப்பம் இதுவென பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மோசடியை நடத்திய முக்கிய நபரால், குறித்த நான்கு அதிகாரிகளுக்கும் வாராந்தம் பணம் வழங்கப்பட்டு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன்படி, ஒருவருக்கு வாரத்திற்கு 30,000, 50,000 மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் வீதம் பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட நான்கு வங்கி முகாமையாளர்களில் ஒருவருக்கு, ஒரு சந்தர்ப்பத்தில் சுமார் 10 இலட்சம் ரூபாய் வரை பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதியியல் குற்ற விசாரணை பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
