நேபாள வெள்ளப்பெருக்கில் சிக்கிய ஒரு வெளிநாட்டவர் உட்பட இருவரை நேபாள மீட்புக் குழு உயிருடன் மீட்டுள்ளது. பேரிடர் ஏற்பட்டு 10 நாட்கள் கடந்துள்ள நிலையில், மேலும் இருவர் பத்திரமாக மீட்கப்பட்டமை மீட்புக் குழுவினருக்கு கூடுதல் நம்பிக்கையை அளித்துள்ளது.
நேபாளத்தில் கடந்த ஓகஸ்ட் 26 அன்று பெருவெள்ளம் காரணமாக பேரழிவு ஏற்பட்டது.
வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் நேபாள ராணுவம், காவல்துறை உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மீட்புக் குழுவினரும் அவர்களுடன் இணைந்து களத்தில் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், நேபாள ராணுவம் தனது எக்ஸ் பக்கத்தில், வெளிநாட்டவர் ஒருவரை மீட்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. சுரங்கப்பாதையில் இருந்து பாதுகாப்புப் படையினரால் மீட்கப்பட்டு அழைத்து வரப்படும் அந்த நபர், உடனடியாக ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார். ஹெலிகொப்டரில் இருக்கும்போதே அந்த நபரை மருத்துவர் ஒருவர் பரிசோதிக்கிறார்.
இதேபோல், நேபாள போலீஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு ஒன்றில், நுவாகோட் பகுதியில் இருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. நுவாகோட் மாவட்டத்தின் பெட்ராவதி பகுதியில் இருந்து அவர் மீட்கப்பட்டுள்ளார்.
நேபாளத்தின் திரிசூலி நீர்மின் திட்டத்தின் சுரங்கப்பாதையிலிருந்து நேற்று (வெள்ளிக்கிழமை) இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட கபீர் மஹர்ஜன் மற்றும் சஞ்சய் ஷா ஆகியோர், உடனடியாக காத்மாண்டுவில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மீட்கப்பட்டவர்களில் ஒருவரான சஞ்சய் ஷா, “சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த நேரத்தில் நான் மந்திரங்களைச் சொல்லிக்கொண்டு இருந்தேன். சுரங்கப்பாதைக்குள் இன்னும் மூன்று அல்லது நான்கு பேர் உயிருடன் இருக்கக்கூடும். ஆழமான பகுதிகளில் இன்னும் கூடுதல் நபர்கள் இருக்கலாம்” என தெரிவித்திருந்தார்.
