Colombo (News 1st) ஆசிரியர் வெற்றிடங்களுக்கு அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்காக நாளை (25) நடத்தப்படவிருந்த போட்டிப் பரீட்சை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
உயர் நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவிற்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் H.J.M.C.அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.
உயர் நீதிமன்றத்தால் வழங்கப்படும் தீர்மானத்திற்கு அமைய, போட்டிப்பரீட்சையை நடத்துவதற்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
அரச சேவைகளில் நியமிக்கப்பட்டுள்ள பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு இணைப்பதற்கான போட்டிப் பரீட்சையை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
பட்டதாரிகள் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான பரிசீலனை நிறைவு செய்யப்படும் வரை போட்டிப்பரீட்சையை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு உயர் நீதிமன்ற நீதியரசர்கள் உத்தரவிட்டனர்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமனம் வழங்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர், வெற்றிடங்கள் காணப்பட்ட பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாக உள்வாங்கப்பட்டிருந்தனர்.
எனினும், அவர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டிருக்கவில்லை.
இந்நிலையில், போட்டிப் பரீட்சையின் அடிப்படையில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர்களாக நியமிப்பதை ஆட்சேபனைக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.