Colombo (News 1st) இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் விடுதலையான இலங்கையை சேர்ந்த சாந்தன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் இருந்து நீதிபதி சுந்தர் மோகன் விலகியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட 7 பேரில் ஒருவரான சாந்தன், தன்னை இலங்கைக்கு திருப்பியனுப்பக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இலங்கையிலுள்ள தனது தாயார் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால், உடனிருந்து அவரை கவனித்துக்கொள்ளும் வகையில் திருச்சி முகாமிலிருந்து விடுவித்து இலங்கைக்கு அனுப்ப வேண்டுமென கடந்த மாதம் அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
எனினும், இந்த மனு மீது நடவடிக்கை எடுக்காத நிலையில் தன்னை இலங்கைக்கு அனுப்ப மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்நிலையில், இந்த மனு நீதிபதிகளான S.S.சுந்தர், சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி சுந்தர் மோகன் அறிவித்துள்ளார்.
இதனையடுத்து, இந்த மனுவை வேறு நீதிபதிகள் அமர்வில் பட்டியலிட தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டதாக த ஹிந்து செய்தி வௌியிட்டுள்ளது.
You must be logged in to post a comment.