Colombo (News 1st) காசா நகரில் அமைந்துள்ள வைத்தியசாலை ஒன்றின் மீது நேற்றிரவு(17) மேற்கொள்ளப்பட்ட வான்வழித் தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த தாக்குதலில் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் நோயாளர்கள் என பலரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
தெற்கு காசாவிற்கு இடம்பெயர முடியாத பல்லாயிரக்கணக்கான மக்கள் கடந்த நாட்களில் இந்த வைத்தியசாலையை அண்மித்து தங்கியுள்ளனர்.
அத்துடன், இஸ்ரேலின் இந்த தாக்குதல் யுத்த குற்றமாகும் என ஹமாஸ் குற்றஞ்சுமத்தியுள்ளது.
நோயாளர்கள் மற்றும் போரில் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறும் வைத்தியசாலை மீது மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியன தெரிவித்துள்ளன.
மேலும் ஐக்கிய அரபு இராச்சியம், ரஷ்யாவுடன் இணைந்து இன்று(18) ஐ.நா பாதுகாப்பு பேரவையின் அவசர கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேலுக்கு இன்று(18) விஜயம் செய்யவுள்ளார்.
You must be logged in to post a comment.