காஸாவின் அல் ஷிபா மருத்துவமனைக்குள் நுழைந்து தேடுதல் வேட்டை நடத்திய இஸ்ரேல் இராணுவம்

Colombo (News 1st) இஸ்ரேல் இராணுவம் வடக்கு காஸாவை கிட்டத்தட்ட தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ள நிலையில், அங்குள்ள அல் ஷிபா மருத்துவமனைக்குள் நுழைந்து தேடுதல் நடத்தியுள்ளனர். 

நேற்று (15) மருத்துவமனை வளாகத்திற்குள் இஸ்ரேல் இராணுவத்தின் பீரங்கி வாகனங்கள் நுழைந்துள்ளன. 

இதன்போது, மருத்துவமனைக்குள் சென்ற இராணுவத்தினர் எல்லா இடங்களிலும் நுழைந்து ஹமாஸ் அமைப்பினரின் செயற்பாடு உள்ளதா என ஆராய்ந்துள்ளனர். 

இந்த தகவலை அல் ஷிபா மருத்துவமனையின் பணிப்பாளர் முகமது ஜாகோட் தெரிவித்துள்ளார்.

காஸா மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் இராணுவம், வடக்கு காசாவை ஓரளவிற்கு தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. 

இந்நிலையில், ஹமாஸ் அமைப்பினர் எங்கு மறைந்துள்ளார்கள் என அவர்கள் தேடி வருகின்றனர். 

ஆரம்பத்தில் இருந்தே அல் ஷிபா மருத்துவமனையில் ஹமாஸ் அமைப்பினர் மறைந்து இருந்து செயற்பட்டு வருவதாக இஸ்ரேல் இராணுவம் குற்றம் சாட்டியிருந்தது. ஆனால், மருத்துவ நிர்வாகம் இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வருகிறது.

ஹமாஸை முறியடிக்கும் வகையில் தெற்கு காஸாவில் தங்களது பிரசாரத்தை மேற்கொள்ள இஸ்ரேல் இராணுவம் திட்டமிட்டுள்ளது. 
இதனிடையே, ஐ.நா. பாதுகாப்பு சபை போர் நிறுத்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது.

ஆயிரக்கணக்கான மக்கள் ஷிபா மருத்துவமனையில் இருந்து வெளியேறிய நிலையில், குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் உயிருக்காக போராடி வருகிறார்கள்.

அல் ஷிபா மருத்துவமனையில் சுமார் 2,300 நோயாளிகளும் ஊழியர்களும் உள்ளனர். இவர்களை வேறு இடங்களுக்கு மாற்றும் வசதிகள் இல்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

மருத்துவமனையில் இன்குபேட்டர் செயற்படாததால் ஏற்கனவே 3 குழந்தைகள் இறந்து விட்டதாகவும் இன்குபேட்டர்களை வழங்க இஸ்ரேல் முன்வந்தும் பலனில்லை எனவும்  மருத்துவமனை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. 

”எரிபொருள் இல்லாததால் ஜெனரேட்டர்கள் செயற்படவில்லை. சத்திரசிகிச்சைகள் எல்லாம் மயக்க மருந்து வசதியின்றி நடைபெறுகின்றன. இங்குள்ளவர்களுக்கு போதிய உணவு, குடிநீர் வசதி இல்லை. சவக்கிடங்குகளில் அழுகும் உடல்களால் மருத்துவமனைகளில் துர்நாற்றம் வீசுகிறது. இந்நிலையில், இங்கு பீரங்கி வாகனங்களுடன் இஸ்ரேல் இராணுவத்தினர் முற்றுகையிட்டுள்ளனர்,” என அல் ஷிபா மருத்துவமனையின் பணிப்பாளர் முகமது ஜாகோட் கூறியுள்ளார். 

அல் ஷிபா மருத்துவமனையின் இந்த அவல நிலைக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தான் முழு பொறுப்பேற்க வேண்டும் என ஹமாஸ் தீவிரவாதிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles