திருகோணமலை புகையிரத நிலைய முன்றலில் நேற்றுமுன்தினம் (17) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இளைஞர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தவேளை அவர்களுக்கு பின்னால் வேகமாக வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது. குறித்த மோட்டார் சைக்கிளில் வந்த மூவரும் மதுபோதையில் வேகமாக வந்தமையினாலே இவ்விபத்து இடம்பெற்றதாக ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
இவ்விபத்தில் திருகோணமலை – கோனேஸபுரி ஆறாம் கட்டை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஏ.தேவானந் (39 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார். அவருடன் பயணித்து அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய யூ.தனூஸன் காயம் அடந்துள்ளார்.
இதேவேளை வேகமாக வந்து மோதிய மற்றொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரும் படுகாயமடைந்துள்ளனர் எனவஸம் அவர்கள் 21, 30 மற்றும் 39 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவருடன் பயணித்த இளைஞர் உட்பட மற்றைய மோட்டார் சைக்கிள் பயணித்த மூவரும் என மொத்தமாக நால்வர் காயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்து தொடர்பில் திருகோணமலை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.