Sunday, September 22, 2024
Homeபொய்களை கூறி முஸ்லிம் இளைஞர்களைத் தூண்டி வாக்கு சேகரிக்கும் அனுர : இம்ரான் எம்.பி..!

பொய்களை கூறி முஸ்லிம் இளைஞர்களைத் தூண்டி வாக்கு சேகரிக்கும் அனுர : இம்ரான் எம்.பி..!

யாரையும் விமர்சனம் செய்யலாம் ஆனால் அதில் சிறிதளவாவது உண்மை இருக்க வேண்டும். விமர்சனம் செய்ய முன் உங்களையும் சுய விமர்சனம் செய்துவிட்டு விமர்சிக்க வேண்டும். முஸ்லிம் வாக்குகளை இலக்கு வைத்து பொய்களை கூறி முஸ்லிம் இளைஞர்களை தூண்டி விடுவதை அனுர குமார நிறுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களை தொடர்புபடுத்தி சஜித் தொடர்பாக அனுர குமார செய்யும் விமர்சனம் சிறுபிள்ளைத்தனமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை (31) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் முஸ்லிம் பிரதேசங்களில் இடம்பெற்ற கூட்டங்களில் அனுர குமார, சஜித் பிரேமதாச தொடர்பாக சிறு பிள்ளைத்தனமான விமர்சனங்களை முன்வைத்தார்.

திகன, மினுவாங்கொடை கலவரங்களின் போது சஜித் பிரேமதாச என்ன செய்தார் என கேட்டிருந்தார். ஆனால் அப்போது ஜனாஸா எரிப்பின் போது சஜித் என்ன செய்தார் என அவர் கேட்கவில்லை. அவரால் கேட்கவும் முடியாது.

அனுர குமார அவர்களே அப்போது சஜித் என்ன செய்தார் என நான் இப்போது கூறுகிறேன் அதுபோன்று நீங்கள் அப்போது என்ன செய்துகொண்டிருந்தீர்கள் என கூறுங்கள்.

அந்த வேளையில் சஜித் நாட்டின் ஜனாதிபதியோ, பிரதமரோ எதிர்கட்சி தலைவரோ அல்லது உங்களை போன்று ஒரு கட்சியின் தலைவரோ அல்ல. அவர் வீடமைப்பு அமைச்சர் மட்டுமே.

அந்த கலவரங்களில் பாதிக்கப்பட்ட மினுவாங்கொடை, குருநாகல் பிரதேசத்திலுள்ள 21 பள்ளிவாசல்களின் புனர்நிர்மாணத்துக்கு சஜித் பிரேமதாச அவர்களே நிதி உதவி செய்திருந்தார்.அந்த நிகழ்வுகளில் சஜித் பிரேமதாசவுடன் நானும் முஜிபுர் ரஹ்மானும் கலந்துகொண்டிருந்தோம். அதன்பின் பாராளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் இது தொடர்பாக நான், முஜிபுர் ரஹ்மான்,மரிக்கார் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களே குரல் எழுப்பியிருந்தோம்.

தெற்காசியாவின் செல்வந்த காட்சிகளில் ஒன்றான மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரான அனுர குமார கலவரங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒரு ரூபா வழங்கி இருப்பாரா? ஜனாஸா எரிப்பின் போது முழு முஸ்லிம் சமூகமும் ஒன்றிணைந்து வீதியில் இறங்கி போராடியது எம்முடன் தமிழ் ,சிங்கள சகோதரர்கள் இணைந்து போராடினார்கள். அப்போது எங்கே சென்றார் இந்த அனுர குமார? ஆனால் முஸ்லிம்களோடு அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஒன்றாக இருந்தவர் சஜித் பிரேமதாச.

யாரையும் விமர்சனம் செய்யலாம் ஆனால் அதில் சிறிதளவாவது உண்மை இருக்க வேண்டும். விமர்சனம் செய்ய முன் உங்களையும் சுய விமர்சனம் செய்துவிட்டு விமர்சிக்க வேண்டும். ஆகவே முஸ்லிம் வாக்குகளை இலக்கு வைத்து பொய்களை கூறி முஸ்லிம் இளைஞர்களை தூண்டி விடுவதை அனுர குமார நிறுத்த வேண்டும்.

விமல் வீரவம்ச மக்கள் விடுதலை முன்னணி ஊடாக அரசியலுக்கு வந்த அந்த கட்சி கொள்கையை உடைய ஒருவர். அவ்வாறான கொள்கை உடையவர்கள் அதிகாரத்துக்கு வந்தால் எவ்வாறு செயற்படுவார்கள் என்பதற்கு விமல் வீரவம்சவே சிறந்த உதாரணம் என தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments