தமிழ்ப் பொதுக் கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கே தமது ஆதரவு என தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் பரமசிவம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் அனைவரும் ‘சங்கு’ சின்னத்திற்கு வாக்களித்து தமது வரலாற்று கடமையை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,
“எம் அன்புக்கினிய தமிழ் மக்களே! ஈழத் தமிழர்கள் கடந்த 15 ஆண்டுகளாக அரசியல் அநாதைகளாக அலைந்து திரிகிறார்கள். நாம் நம்பிய அனைவருமே தேர்தல்களின் பின்னர் எம்மை ஏமாற்றியே வருகிறார்கள். தேர்தலில் வாக்குறுதி கொடுத்த யாருமே அதன் பின்னர் எம்மை மதித்ததில்லை.
இம்முறை எமக்கு ஒரு புதிய தெம்பு பிறந்துள்ளது. வெற்றி பெறப்போவதில்லை எனத் தெரிந்து கொண்டே நாம் ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்கப் போகிறோம். ஏன் தெரியுமா?
நாம் நம்பிய அனைவரும் எம்மைக் கைவிட்ட போதும், நாம் எமது உரிமைகளுக்கான போராட்டத்தைக் கைவிடவில்லை. அதற்காகப் போராடும் எமது உணர்வுகளை இன்னும் இழந்துவிடவில்லை. எமது வலிகளையும் வேதனைகளையும் இந்த உலகுக்கு உரக்கச் சொல்லப் போகிறோம்.
வெற்றி பெறும்வரை எமது தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்ட உணர்வுகளை அடுத்த அடுத்த தலைமுறைக்கு ஊட்டுவது எமது வரலாற்றுக் கடமை.
கடந்த காலங்களில் கூட்டணியின் தலைமை பல துரோகங்களுக்குத் துணைபோய் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால், இன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமை தமிழ் இனத்தின் வரலாற்றுக் கடமையைச் செய்யத் தயங்காது.
எமது ஆதரவு தமிழ்ப் பொதுக் கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் அரியநேத்திரனுக்கே. எனவே, தமிழ் மக்கள் அனைவரும் ‘சங்கு’ சின்னத்திற்கு வாக்களித்து தமது வரலாற்று கடமையை நிறைவேற்ற வேண்டும் என அன்புடன் வேண்டுகிறோம்” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.