பா.ஜ.க தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்தார் சிறீதரன் எம்.பி!

மூன்று நாள் பயணமாக இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையிலான குழுவினரை நேற்று நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இச்சந்திப்பின் போது, ஈழத் தாயகத்தில் தமிழ் மக்கள் எதிர்கொண்டு வரும் சமகால அரசியல் சவால்கள் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

தாயகத்தில் தமிழர்களின் பூர்வீக இந்து ஆலயங்கள் இடிக்கப்பட்டு, அவ்விடங்களில் திட்டமிட்ட முறையில் பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்றமை குறித்து பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களின் கவனத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கொண்டு சென்றார்.

அத்துடன், யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் தற்போது தோண்டப்பட்டு வரும் எலும்புக்கூட்டுத் தொகுதிகள் உள்ளிட்ட விவகாரங்களைச் சுட்டிக்காட்டிய அவர், தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட அநீதிகளுக்கான நீதியை சர்வதேச மட்டத்தில் நிலைநாட்டுவதன் அவசியம் குறித்தும் விரிவாக விளக்கமளித்தார்.

ஈழத் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு மற்றும் தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் அபிலாஷைகள் தொடர்பிலும் இருதரப்பிற்கும் இடையில் இதன்போது ஆழமான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.

இத்தகைய அரசியல் சந்திப்புகளையும் ஆலோசனைகளையும் இருதரப்பிற்கும் இடையில் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வது குறித்து இணக்கம் காணப்பட்டதுடன், நாடாளுமன்ற உறுப்பினருக்கு மதிய உணவு உபசரிப்பும் வழங்கப்பட்டது.

இந்த உயர்மட்டச் சந்திப்பில், தமிழ் மக்களின் அரசியல் விவகாரங்களில் 50 ஆண்டுகால நீண்ட அனுபவமிக்க மூத்த தலைவரான கே. எஸ். ராதாகிருஷ்ணன், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மற்றும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles