ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களும் விரைவில் வெளியிடப்படும் என அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுத் தேர்தல் முடிவுகளுக்கமைய ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட ஐந்து தேசிய பட்டியல் ஆசனங்களுக்கான உறுப்பினர்கள் இதுவரையில் முழுமையாகப் பெயரிடப்படவில்லை.
இதன்படி, தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ரஞ்சித் மத்தும பண்டார நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த கட்சியின் ஏனைய 4 தேசியப்பட்டியல் ஆசனங்களுக்கான உறுப்பினர்களின் பெயர்கள் வெளியாகவில்லை.
குறித்த தேசியப் பட்டியல் ஆசனங்களுக்காக இரான் விக்ரமரட்ன, இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், டலஸ் அழகப்பெரும, பேராசிரியர் ஜீ.எல், பீரிஸ், மனோ கணேசன் மற்றும் சுஜீவ சேனசிங்க ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
இதேவேளை, தேசிய பட்டியல் ஊடாக தாம் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவது உறுதியாகியுள்ளதாகத் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.