மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கோரியும், இலங்கையில் உள்ள படகுகளையும் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும் விடுவிக்குமாறு வலியுறுத்தியும் இராமேஸ்வரம் மீனவர்கள் முன்னெடுத்திருந்த தொழிற்சங்க நடவடிக்கை 8 நாட்களின் பின்னர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை அதிகரிக்கப்படும் எனத் தமிழக மாநில முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மீனவர்களைத் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் உள்ளிட்ட தரப்பினர் நேரில் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர்.
அதேநேரம், நீண்டகாலமாகப் படகுகள் மீட்கப்படாமல் உள்ள மீனவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு 6 லட்சம் இந்தியா ரூபாவிலிருந்து 8 லட்சம் இந்திய ரூபாவாக அதிகரிக்கப்படுமெனத் தமிழக மாநில முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அத்துடன் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களின் குடும்பங்களுக்கு தற்போது வழங்கப்படும் 350 இந்திய ரூபாய் கொடுப்பனவு 500 இந்திய ரூபாவாக அதிகரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்தநிலையில் நேற்று இடம்பெற்ற மீனவ சங்கப் பிரதிநிதிகளின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் தொழிற்சங்க நடவடிக்கையைக் கைவிடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.