ஜம்மு-காஷ்மீரின் சோபியானில் பாதுகாப்புப் படையினருக்கும் 4 பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மோதல் முதலில் குல்காமில் தொடங்கி பின்னர் ஷோபியானில் உள்ள ஒரு காட்டுப் பகுதியில் நடைபெற்று வருகிறது.
ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளின் பாதுகாப்புப் படையினர் சுமார் இரண்டு மணி நேரமாக பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு வருகின்றனர். உளவுத்துறை தகவலைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதிகளை மடக்கிப் பிடித்தனர்.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூரை இந்தியா நடத்தியது. இதனை தொடர்ந்து இந்திய எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்தியாவும் தக்க பதிலடி கொடுத்தது. இதனை தொடர்ந்து உலக நாடுகள் சண்டையை நிறுத்துவது தொடர்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தானை வலியுறுத்தி வந்தன.
அதன்படி இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதல் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனிடையே, பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், இந்தியாவின் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடந்தால், அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று உறுதிப்பட தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்நாட்டின் பயங்கரவாத தாக்குதலை எதிர்த்து நடத்திய தாக்குதல் நிறுத்தப்பட்ட நிலையில் இந்திய ராணுவப் படையினர் பாகிஸ்தானை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றன.