குஜராத்தில் கடந்த மே 8 ஆம் தேதி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. சோட்டா உதேபூரில் வசிக்கும் அகிக்ஷா பர்மர் என்ற மாணவி தனது 10 ஆம் வகுப்பு முடிவுகளை பார்த்து அதிர்ச்சியில் உரைந்தார்.
அதாவது, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து பாடங்களும் தேர்வெழுதிய தனக்கு, ஆப்சன்ட் என்பதால் ஃபெயில் என ரிசல்ட் வந்ததால் அவர் குழம்பிப்போனார்.
இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் மாவட்ட கல்வி அதிகாரியிடம் புகார் கொடுத்த பிறகு, சிசிடிவியை ஆய்வு செய்ததில் மாணவி எல்லா பாடங்களையும் எழுதியிருப்பது தெரியவந்தது.
சோட்டா உதேபூர் மாவட்ட கல்வி அதிகாரி (DEO) ஆனந்த் பர்மர், தேர்வு மேற்பார்வையாளர் ஆசிரியர்கள் மற்றும் பொறுப்பாளர் உட்பட ஆறு பேருக்கு இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
மேலும் நடத்தப்பட்ட விசாரணையில் தேர்வுக்கு வராத மாணவருக்கு 52% மதிப்பெண்களுடன் தேர்ச்சி எனவும் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட கல்வி அதிகாரி ஆனந்த் பர்மர் தெரிவித்தார்.