கனடாவில் தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் திறக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் உடனடியாக இராஜதந்திர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிப்பதாக நாமல் ராஜபக்ச தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகரை அழைத்து இதற்கான எதிர்ப்பை அரசாங்கம் வெளியிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நினைவுச் சின்னம் திறக்கப்பட்டதன் பின்னணியில் உள்ள அரசியல் நோக்கங்கள் குறித்தும் தாம் கவலையடைவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டங்களில் இலங்கையின் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக எந்த இனப்படுகொலையும் நிரூபிக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர், தவறான இனப்படுகொலை கதையை கனடா ஊக்குவிப்பதாகவும் கூறியுள்ளார்.
‘அமைதி மற்றும் ஒற்றுமையை நோக்கிச் செயல்படுவதற்குப் பதிலாக, சில குழுக்கள் தங்கள் சொந்த நலன்களுக்காகப் பிரிவினையைத் தூண்டி விட்டன.’
‘பயங்கரவாதத்துடன் தொடர்புடைய குழுக்களை ஆதரிக்கும் கனடாவின் வரலாறு, உலகளாவிய பயங்கரவாதம் குறித்த அதன் நிலைப்பாடு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகிறது’ என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.