Saturday, June 14, 2025
HomeMain NewsSri Lankaஆசிரியர் வெற்றிடங்களுக்கு தீர்வு- பிரதமர்

ஆசிரியர் வெற்றிடங்களுக்கு தீர்வு- பிரதமர்

பயிற்சி ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்யும் நடவடிக்கையானது தற்போதுள்ள முறைமைக்கேற்பவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அந்த முறைமையில் உள்ள குறைபாடுகள் காரணமாக எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் பாராளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,

சேவையில் உள்ள ஆசிரியர்களின் ஓய்வு காரணமாக பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்கள், கஷ்டப் பகுதிகளில் உள்ள பாடங்களின் பன்முகத்தன்மை, பாட மட்டத்தில் ஆசிரியர் வெற்றிடங்களைக் கணக்கிடுதல் மற்றும் ஆசிரியர் கல்லூரி மட்டத்தில் ஒரே நேரத்தில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான வசதிகள் உள்ளிட்ட அனைத்து காரணிகளையும் கருத்திற் கொண்டு பயிற்சி ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்யும் தீர்மானம் மேற்கொள்ளப்படுகிறது.

பின்னர், அவர்கள் தேசிய கல்விக்கல்லூரி டிப்ளோமா பட்டத்தைப் பெற்ற பின்னர், கல்விக் கல்லூரி இறுதியாண்டு பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் அவர்களுக்கு அரசாங்கப் பாடசாலைகளில் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படுகின்றன.

மாவட்ட, மாகாண மற்றும் தேசிய மட்டங்களில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டாலும், சம்பந்தப்பட்ட பகுதியில் வெற்றிடங்கள் இல்லாவிட்டால், நியமனங்கள் வழங்கும்போது, அவர்கள் பிற மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு அனுப்பப்படுவார்கள்.

கல்விக் கல்லூரிகளுக்கு ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பில், ஆட்சேர்ப்பு செய்யப்படும் ஆசிரியர்கள் நாட்டின் எந்தப் பகுதியிலும் பணியாற்ற இணங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், அந்தந்த மாகாணங்களில் பயிற்சி பெறுநர்களால் விண்ணப்பிக்கப்பட்ட பாடத்தில் வெற்றிடங்கள் இல்லாத சந்தர்ப்பத்தில், பயிற்சி பெறுநர்களின் விருப்பத்தின் அடிப்படையில், பயிற்சி பெறுநர்கள் நாட்டின் பிற பகுதிகளுக்கு அந்த வெற்றிடங்கள் உள்ள பகுதிகளுக்கு அனுப்பப்படுவார்கள்.

இந்த வெற்றிடங்களை நிரப்புவதில் சிக்கல்கள் எழுந்துள்ளன. இதற்குக் காரணம், நாம் தற்போதுள்ள முறைகளைப் பின்பற்றினாலும், ஆட்சேர்ப்பு மற்றும் வெற்றிடங்களைக் கண்டறியும் செயல்பாட்டில் உள்ள சிக்கல்கள் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

தற்போது, கல்வி அமைச்சு இந்தப் பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றைச் சரிசெய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 2020 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான குழுக்கள் அவர்களின் இணக்கத்துடன் ஆசிரியர் நியமனங்களுக்கு இவ்வாறு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர்.

என்றாலும் வழங்கப்பட்டுள்ள நியமனங்களை ஏற்றுக்கொள்ளுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். பின்னர் ஒரு குறிப்பிட்ட முறைமையின்படி அல்லது விருப்பத்தின் பேரில் இடமாற்றங்களை செய்துகொள்ளுங்கள்.

நாம் அதை ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை பிள்ளைகள் இருவரின் கண்ணோட்டத்திலிருந்தும் பார்க்க வேண்டும். தெற்கிலிருந்து வடக்கிற்கு நியமனம் பெற்றவர்களும் இருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.

எட்டு ஆண்டுகளாக ஒரே இடத்தில் இருக்கும் ஆசிரியர்களும் உள்ளனர். இந்தப் பிரச்சினைகள் அனைத்தும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments