நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படுகின்ற அதிகமான தண்ணீர் தாகம் மருத்துவ ரீதியாக ‘பாலிடிப்சியா’ அல்லது ‘தாகமிகுமை’ என்று அழைக்கப்படுகிறது.
இது ஒரு தனிப்பட்ட நோய் அல்ல.
ஒரு நோயின் அறிகுறியாக இருக்கலாம்.
பாலிடிப்சியாவில் போதுமான அளவு தண்ணீர் குடித்த பிறகும் தாகம் குறையாது.
இது ஏற்பட முக்கிய காரணம், கட்டுப்பாடற்ற சர்க்கரை நோய் ஆகும்.
இருப்பினும் உங்கள் ரத்த சர்க்கரை கட்டுக்குள் இருப்பதால், கீழ்க்கண்ட காரணிகளில் ஏதேனும் ஒன்றால் உங்களுக்கு அதிகமான தண்ணீர் தாகம் ஏற்படலாம்.
1) நீரிழிவு இன்சிபிடஸ்: இதில் அதிகமான அளவு சிறுநீர் வெளியேறி, உடலில் உள்ள திரவங்களின் சமநிலையை இழக்க செய்து, தாகத்தை அதிகரிக்கிறது.
2) முதன்மை தாகமிகுமை (பிரைமரி பாலிடிப்சியா): உடலியல் தூண்டல் இல்லாத நிலையிலும் உண்டாகும் அதிக தாகம் மற்றும் நீர் பருகும் நிலை.
3) சைக்கோஜெனிக் பாலிடிப்சியா அல்லது உளச்சார்பு தாகமிகுமை: கடுமையான மனநல கோளாறுகள் உள்ளவர்களிடம் காணப்படும் அதிகமான நீர் உட்கொள்ளல்.
4) நீர்ச்சத்து இழப்பு: வாந்தி, வயிற்று போக்கு, அதிகம் வியர்த்தல் போன்ற பிரச்சனைகளால் ஏற்படும் நீர்ச்சத்து இழப்பு குறைபாடு.
5) அதிக உப்பு: அதிக உப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடும் போது, உப்பு ரத்தத்தில் உறிஞ்சப்படுவதால், திசுக்களில் உள்ள திரவம் இழுக்கப்பட்டு தாகம் அதிகரிக்கிறது.
6) செரிமானம் தொடர்பான பிரச் சினை: இதில் உணவை ஜீரணிக்க அதிமான அளவு தண்ணீர் தேவைப்படுவதால் தாகம் அதிகரிக்கிறது.
7) ரத்த சோகை.
8) உமிழ் நீர் குறைவாக சுரப்பதால் உண்டாகும் வறண்ட வாய் பிரச்சனை
9) கடுமையான உடற்பயிற்சி
10) உடலில் வேறு எங்கேனும் ஏற்படும் குறிப்பிடத்தக்க ரத்த இழப்பு
11) அதிகமான காபின் அல்லது மது அருந்துதல்.
12) மருந்துகளின் பக்கவிளைவுகள் (டையூரிடிக்ஸ், லித்தியம்)
13) ரத்தத்தில் குறைந்த அளவு பொட்டாசியம் (ஹைபோகலீமியா)
14) மிகை தைராய்ட் நிலை (ஹைப்பர்தைராய்டிசம்)
மேற்கூறிய ஏதேனும் காரணங்களால் உங்களுக்கு அதிகமாக தண்ணீர் தாகம் எடுக்கிறதா என்று உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்து உரிய பரிசோதனைகளை செய்து கொள்ளுங்கள்.