இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 5ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது.
போட்டியில் 374 என்ற வெற்றி இலக்கை நோக்கி தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி, நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட்டினை இழந்து 50 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இந்தநிலையில் இங்கிலாந்து அணி குறித்த போட்டியில் வெற்றிபெற இன்னும் 324 ஓட்டங்கள் தேவைப்படுவதுடன், இந்திய அணிக்கு 9 விக்கெட்டுகள் தேவையாகவுள்ளது.
முன்னதாக தமது முதலாவது இன்னிங்ஸில் இந்திய அணி 224 ஓட்டங்களையும், இங்கிலாந்து அணி 247 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டது.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 396 ரன்களை பெற்றிருந்த நிலையில் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
துடுப்பாட்டத்தில் ஆகாஷ் தீப், ரவீந்திர ஜடேஜா, வொஷிங்டன் சுந்தர் ஆகியோர் அரை சதம் கடந்தனர்.
இதற்கமைய குறித்த போட்டியில் ரவீந்திர ஜடேஜா மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
இந்திய அணி வெளிநாடுகளில் ஆடிய ஒரு டெஸ்ட் தொடரில் 6 ஆம் இலக்கத்தில் அல்லது அதற்கு கீழான துடுப்பாட்ட வரிசையில் களமிறங்கி அதிக ஓட்டங்களை குவித்த வீரர் என்ற சாதனையை ரவீந்திர ஜடேஜா தன்வசப்படுத்தியுள்ளார்.
இதன்படி அவர் குறித்த தொடரில் 516 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.
இதில் 5 அரை சதங்களும், ஒரு சதமும் உள்ளடங்கும்.
முன்னதாக விவிஎஸ் லக்ஷ்மன் கடந்த 2002 ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் 474 ஓட்டங்களை பெற்றதே சாதனையாக இருந்தது.
குறித்த சாதனையை 23 ஆண்டுகளின் பின்னர் ரவீந்திர ஜடேஜா முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
