ரஷியா மீது மேலும் பொருளாதார தடை: இங்கிலாந்து பிரதமர் எச்சரிக்கை

உக்ரைன்-ரஷியா இடையே 3 ஆண்டுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து அலாஸ்காவில் அமெரிக்க அதிபர் டிரம்பும், ரஷிய அதிபர் புதினும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று செல்கிறார்.

இந்நிலையில், ‘விருப்ப கூட்டணி’ என்ற பெயரில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரானும், ஜெர்மன் அதிபர் பிரைட்ரிச் மெர்சும் வீடியோ அழைப்பில் பேசினர். அதில், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் கலந்துகொண்டார். அப்போது, கெய்ர் ஸ்டார்மர் கூறியதாவது:

அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகள், உக்ரைன் மீதான ரஷியாவின் சட்ட விரோத போரை முடிவுக்கு கொண்டு வருவதில் முன் எப்போதையும் விட நம்மை நெருக்கமாக ஒன்று சேர்த்துள்ளன.

கொலைகள் நடப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் அவரது தேடலை நாம் பாராட்ட வேண்டும். அதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை இணைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். அவர் இல்லாமல் உக்ரைன் பிரச்சனைக்கான அமைதி தீர்வை முடிவு செய்ய முடியாது.

உக்ரைனுக்கு வலுவான பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கும் அமெரிக்காவின் வெளிப்படைத் தன்மையை ஐரோப்பாவுடன் இணைந்து வரவேற்கிறேன். ரஷிய அதிபர் புதினை தடுப்பது முக்கியம்.

உக்ரைன் மீதான கொடூர தாக்குதலை புதின் நிறுத்தும் வரை, ரஷியா மீது மேலும் பல பொருளாதார தடைகளை நாங்கள் விதிப்போம். அவை ரஷிய பொருளாதாரத்துக்கும், அதன் மக்களுக்கும் ஏற்கனவே தண்டனையாக அமைந்துள்ளன என தெரிவித்தார்.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles