#image_title

இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தில் (PSTA), ‘பயங்கரவாதம்’என்பதற்கான வரைவிலக்கணத்தை சர்வதேச தரத்திற்கு அமையக் குறைக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசுக்குக் கடும் அழுத்தம் கொடுத்துள்ளது.

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கு (PTA) மாற்றீடாகக் கொண்டு வரப்படும் இந்தப் புதிய சட்டமூலம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்துள்ள பிரதான பரிந்துரைகள் வருமாறு:-

தற்போதைய வரைவுத் திட்டத்தில் ‘பயங்கரவாதம்’ என்பது மிகவும் விரிவாகவும், தெளிவற்ற முறையிலும் வரையறுக்கப்பட்டுள்ளது. இது ஜனநாயகரீதியிலான அமைதிப் போராட்டங்கள், சிவில் சமூகச் செயற்பாடுகள் மற்றும் மாற்று அரசியல் கருத்துக்களைக் கூட ‘பயங்கரவாதக் குற்றங்களாக’வகைப்படுத்த வழிவகுக்கும் என ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, இதனைத் துல்லியமான சர்வதேச நெறிமுறைகளுக்கு ஏற்பச் சுருக்குவது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் ஏற்றுமதித் துறைக்கு மிக அவசியமான ஜி.எஸ்.பி. பிளஸ்
வரிச்சலுகையைத் தொடர்ந்து பெறுவதற்கு, மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலான சர்வதேச தரத்திலான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைக் கொண்டுவருவது ஒரு முக்கிய நிபந்தனையாகும். சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படாவிடின் இந்தச் சலுகை பாதிக்கப்படலாம் என்ற எச்சரிக்கையும் மறைமுகமாக விடுக்கப்பட்டுள்ளது.

முன்னைய ரணில் விக்ரமசிங்க அரசின் சட்டமூலத்தைத் தவிர்த்து, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசு புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் குறித்துப்பொதுமக்களின் கருத்துக்களைக் கோரியுள்ளது. சர்வதேச அழுத்தங்களைத் தொடர்ந்து, தற்போது நீதி அமைச்சு பயங்கரவாதக் குற்றங்களின் பட்டியலை மீளாய்வு செய்து வரைவிலக்கணத்தைச் சுருக்கும் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

குறிப்பாக, தடுத்துவைப்பு அதிகாரங்கள் மற்றும் நிறைவேற்று அதிகாரங்கள் புதிய சட்டத்தில் எவ்வாறு மாற்றியமைக்கப்படும் என்பதை சிவில் சமூக அமைப்புகளும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here