‘பழசும் வேண்டாம், புதுசும் வேண்டாம்’ எனும் முழக்கத்துடன், பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்  இன்று சனிக்கிமை மாபெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

‘தாயக செயலணி’ அமைப்பின் ஏற்பாட்டில் இந்த எழுச்சிப் போராட்டங்கள் நடைபெற்றன.

யாழ்ப்பாணம் பொது நூலகத்துக்கு முன்பாக ஒன்றுகூடிய நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள், அங்கிருந்து பேரணியாக வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் வரை சென்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சிவில் அமைப்பினர், கல்விச் சமூகத்தினர் மற்றும் பொதுமக்கள் எனப் பெருமளவிலானோர் கலந்துகொண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராகக் கோசங்களை எழுப்பினர்.

கிழக்கு மாகாணத்தில், மட்டக்களப்பு கல்லடிப் பாலத்துக்கு அருகில் போராட்டக்காரர்கள் ஒன்றுகூடினர். அங்கிருந்து பேரணியாகப் புறப்பட்ட அவர்கள் மட்டக்களப்பு காந்தி பூங்காவைச் சென்றடைந்தனர்.

இங்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மதத் தலைவர்கள், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபைகளின் பிரதிநிதிகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எனப் பலதரப்பட்டோர் பங்கேற்றனர்.

தற்போது நடைமுறையில் உள்ள அடக்குமுறை மிகுந்த ‘பயங்கரவாதத் தடைச் சட்டத்தை’ உடனடியாக நீக்க வேண்டும் எனவும், அதற்குப் பதிலாக அரசாங்கம் கொண்டுவர முயற்சிக்கும் புதிய ‘பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை’ முற்றாகக் கைவிட வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் இதன்போது வலியுறுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here