ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தை இலக்கு வைத்து ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்தத் தாக்குதல் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்தத் தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஈராக் பாதுகாப்புப் படையினர், இதுவரை அமெரிக்கத் தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் இதுவே மிகவும் பாரிய மற்றும் மோசமான தாக்குதல் என்று குறிப்பிட்டுள்ளனர். ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் ஒருங்கிணைக்கப்பட்டு இந்தத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தாக்குதல் நடத்தப்படுவதற்கு சுமார் ஆறு மணித்தியாலங்களுக்கு முன்னதாகவே, ஈராக்கில் வசிக்கும் அமெரிக்கப் பிரஜைகளுக்கான பாதுகாப்பு எச்சரிக்கையைத் தூதரகம் விடுத்திருந்தது. தற்போதைய பாதுகாப்புச் சூழலைக் கருத்திற்கொண்டு அமெரிக்கப் பிரஜைகள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அந்த எச்சரிக்கையில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
