வடக்கு ரயில் சேவை கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ள அனர்த்தப் பாதிப்பைத் தொடர்ந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று வியாழக்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்பட்டது.
இன்று காலை கல்கிசையில் பயணத்தை ஆரம்பித்த ரயில், யாழ்ப்பாணம் காங்கேசன்துறையை வந்தடைந்தது.
ரயில் பாதை மற்றும் பால புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில், சேவை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தற்காலிகமாக ரயில் பாதை புனரமைக்கப்பட்ட பின்னர், கடந்த டிசெம்பர் மாதம் 24 ஆம் திகதி முதல் ரயில் சேவை முன்னெடுக்கப்பட்டதுடன் கொழும்பு – யாழ்ப்பாணம் இடையிலான சேவை குறைந்த வேகத்தில் முன்னெடுக்கப்பட்டது.
அதன் பின்னர், சேதமடைந்த பகுதிகளை முழுமையாக புனரமைப்பதற்காக வடக்குக்கான ரயில் சேவை மீண்டும் கடந்த ஜனவரி மாதம் 19 ஆம் திகதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து, இந்திய அரசாங்கத்தின் 5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி பங்களிப்பில், புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு இன்று ரயில் சேவை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
