ஜனநாயகன் முழுப் படமும் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஜனநாயகன் திரைப்படம் பொங்கலையொட்டி ஜனவரி 9ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும், சில காட்சிகள் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி சான்றிதழ் வழங்குவதை தணிக்கை வாரியம் நிறுத்தி வைத்தது.
தொடர்ந்து, நடைபெற்ற வழக்கு விசாரணைகளில் இப்படத்தை மறுதணிக்கை செய்ய நீதிமன்றம் உத்தரவு அளித்தது. இதனால், ஜனநாயகன் வெளியீட்டில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டதுடன் வணிக ரீதியாக சில பின்னடைவுகளும் ஏற்பட்டன.
தற்போது, மறுதணிக்கைக்கான திரைப்படத்தை மத்திய சான்றிதழ் வாரியம் பார்த்துவிட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், அரசியல் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் இருக்கும் நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் படத்தை பார்த்து வெளியீடு தொடர்பாக முடிவெடுக்க பரிந்துரைக்கப்பட்டது.
இதன்காரணமாக, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்தவுடன் மே இரண்டாவது வாரத்தில் ஜனநாயகன் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று வியாழக்கிழமை மாலை ஜனநாயகன் திரைப்படத்தின் சில காட்சிகள் இணையத்தில் சட்டவிரோதமாக மர்ம நபர்களால் வெளியிடப்பட்டது.
இன்று அதிகாலை 3 மணிநேரம் கொண்ட முழுப் படமும் இணையத்தில் வெளியாகியதால் படக்குழுவினரும் ரசிகர்களும் பேரதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும், இணையத்தில் வெளியான ஜனநாயகன் படத்தை நீக்கும் முயற்சியில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
