சிங்கப்பூரின் துறைமுக முனையங்களுக்கு இடையே தானியங்கிக் கப்பல்கள் மூலம் கொள்கலன்கள் கொண்டுசெல்வது எதிர்காலத்தில் சாத்தியமாகலாம்.
அந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்கி சோதனை செய்வதற்கான திட்டங்களை முன்வைக்கும்படி கடல்துறை, துறைமுக ஆணையமும், பிஎஸ்ஏ செயல்பாட்டு நிறுவனமும் அழைப்புவிடுத்துள்ளன.
துவாஸ், பாசிர் பாஞ்சாங் ஆகிய முனையங்களுக்கு இடையே கொள்கலன்களைக் கொண்டுசெல்லக்கூடிய தானியங்கிக் கப்பல்கள் அன்றாடத் துறைமுகச் செயல்பாடுகளில் முக்கிய அங்கம் வகிப்பதாக ஆணையமும் நிறுவனமும் குறிப்பிட்டன.
தானியங்கித் திறன்கள் மேம்படுவதால் புதிய வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்படும். தானியக்க முறையில் கப்பல்களையும் அவற்றின் செயல்பாடுகளையும் கண்காணிக்க முடியும் என்று அவை தெரிவித்தன.
தானியக்கத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது கடல்துறையில் அடுத்தகட்ட முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுவதாகவும் தானியங்கிக் கப்பல்களைச் சோதித்துப் பார்க்க சிங்கப்பூர் ஒரு சிறந்த தளம் என்றும் போக்குவரத்து மூத்த துணையமைச்சர் முரளி பிள்ளை கூறினார்.
சிங்கப்பூர்க் கடல்துறை வார நிகழ்ச்சியின் இரண்டாம் நாளில் உரையாற்றிய திரு முரளி, புதிய தொழில்நுட்பங்கள், உற்பத்தியில் நல்ல பலனைப் பெறுவதற்கான உத்தரவாதத்தைத் தருகின்றன என்றார்.
துவாஸ் துறைமுகத்தின் முதற்கட்டத்தில் தானியக்க வாகனங்களும் பாரந்தூக்கிகளும் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ளன என்றும் உற்பத்தியில் அவை பெரிய அளவில் பலன் தந்துள்ளன என்றும் திரு முரளி சுட்டினார்.
