தேசிய மே தினப் பேரணியில் சிறப்புரையாற்றிய பிரதமர் லாரன்ஸ் வோங், தமது உரையின் இறுதியில் கண்கலங்கினார்.
சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படை மத்திய கிழக்கிற்கு முன்னதாக அனுப்பிய மீட்பு விமானம் மூலம் திரும்பிவந்த சிங்கப்பூரர் ஒருவரால் எழுதப்பட்டு, மார்ச் மாதம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழில் வெளியான வாசகர் கடிதம் ஒன்றைப் படித்தபோது திரு வோங் மிகவும் உணர்ச்சிவயப்பட்டார்.
விமானம் புறப்பட்டபோது, ஒற்றுமையின் வெளிப்பாடாக எவ்வாறு கரவொலி எழுந்தது என்பதையும் பயணிகள் அனைவரும் இணைந்து ‘மாஜூலா சிங்கப்பூரா’ பாடலைப் பாடியதையும் நிசார் கேஷ்வானி எனும் அந்தச் சிங்கப்பூரர், அந்தக் கடிதத்தில் நினைவுகூர்ந்தார்.
‘வீட்டிற்கு வரவேற்கிறோம்,’ என்ற வார்த்தைகள் ஒரு வாக்குறுதி என்று நிசார் கேஷ்வானி அந்தக் கடிதத்தில் எழுதியிருந்ததாகப் பிரதமர் வோங் சொன்னார்.
“சிங்கப்பூரர்கள் உலகில் எங்கு இருந்தாலும், நம் நாடு தனது சொந்த மக்களைக் கவனித்துக்கொள்ளும். மேலும், இது தலைமுறை தலைமுறையாகப் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு வாக்குறுதியாகும்,” என்று நிசார் கேஷ்வானி எழுதியிருந்தது தன்னை நெகிழ வைத்ததாக கண்கலங்கியபடி திரு வோங் கூறினார்.
