பிரித்தானியாவில் தஞ்சம் கோரியிருந்த இலங்கை இளைஞர் ஒருவர் திடீரெனக் கைதுசெய்யப்பட்டு, நாடு கடத்தப்பட உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்காட்லாந்தின் துர்சோ நகரில் வசித்து வரும் சாம் ஹேரத் என்ற இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 13ஆம் திகதி, வழக்கமான பதிவிற்காக பொலீஸ் நிலையம் சென்றபோது அவர் திடீரெனக் கைது செய்யப்பட்டு, குடியேற்றத் தடுப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இலங்கையில் பௌத்த துறவியாக இருந்த சாம், அங்கிருந்த சில உயர்மட்டத் துறவிகள் மற்றும் அரசியல்வாதிகளின் ஊழல்களைப் அம்பலப்படுத்தியதால் தனக்குக் கொலை அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறுகிறார்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டனுக்கு வந்த இவர், துர்சோ நகரில் ஒரு தன்னார்வலராகவும், நல்லவராகவும் மக்கள் மத்தியில் பெயரெடுத்துள்ளார்.
தற்போது இவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளார். அவரை நாடு கடத்துவதைத் தடுக்க சட்டப் போராட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
இதற்கான சட்டச் செலவுகளை ஈடுகட்ட கோ ஃபன்ட் மீ மூலம் மக்கள் நிதி திரட்டி வருகின்றனர். இதுவரை சுமார் 2,000 பவுண்டுகள் வரை நிதி சேகரிக்கப்பட்டுள்ளதாகத் தேவாலயத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டன் உள்நாட்டு அலுவலகம் சட்டவிரோதமாகக் குடியேறுபவர்களை வெளியேற்றுவதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்திருந்தாலும், சாம் மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டால் அவர் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக அவரது ஆதரவாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
