மின்சாரக் கட்டணத்தை 18 சதவீதத்தால் அதிகரிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. எனினும், இந்த மின் கட்டண உயர்வு 95 சதவீதமானவர்களை பாதிக்காது என்றும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
2026ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்கான மின்சார கட்டணத் திருத்தம் குறித்த இறுதி முடிவு இன்று – மே 9ஆம் திகதி அறிவிக்கப்பட்டது. இதன்படி, தற்போதைய மற்றும் எதிர்வரும் காலாண்டுகளில் சுமார் 3ஆயிரத்து 800 கோடி ரூபாய் வருமான பற்றாக்குறை ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளமை உள்ளிட்ட மூன்று முக்கிய காரணிகளை முன்னிலைப்படுத்தியே இந்த மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆயிரத்து 500 கோடி ரூபாய் மானியத்தை வழங்குவதாக அரசாங்கம் எழுத்துபூர்வ உறுதியளித்துள்ளதை அடுத்து இந்த கட்டணத் திருத்தம் சுமார் 5 சதவீதமான மின் நுகர்வோரை மாத்திரமே பாதிக்கும் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
எஞ்சியுள்ள 95 சதவீதமான மின் நுகர்வோருக்கு இந்த புதிய கட்டணத் திருத்தம் பொருந்தாது என்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் தெளிவுபடுத்தியுள்ளது.
இதற்கமைய, 180 அலகுகளுக்கு மேல் பயன்படுத்துவோரின் மின் கட்டணம் 18 சதவீத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 0 முதல் 180 வரையான மின் அலகுகளை பயன்படுத்துவோரின் மின் கட்டணம் அதிகரிக்கப்படாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
