டீசலுக்கான உண்மையான செலவு லீற்றருக்கு 720 ரூபாயாகும். டீசலின் விலையை 392 ரூபாயாகப் பேணுவதற்காக அரசு 100 ரூபாய் மானியம் வழங்குகிறது. இந்த நடைமுறையை நீண்டகாலத்துக்கு முன்னெடுக்க முடியாது என்று ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இன்று புதன்கிழமை கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறுகையில்,
எரிபொருள் நுகர்வை குறைப்பதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம். உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்புக்கு ஏற்பவே உள்நாட்டில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில், தற்போது இலங்கையில் ஒரு லீற்றர் டீசலின் உண்மையான செலவு 720 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. டீசல் விலையை 392 ரூபாயாகப் பேணுவதற்காக அரசாங்கம் தற்போது ஒரு லீற்றருக்கு சுமார் 100 ரூபாய் மானியத்தை வழங்கி வருகிறது.
இந்த மானியக் கொள்கையால் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் பெரும் நட்டத்தைச் சந்தித்து வருகிறது. இவ்வாறானதொரு முறைமையை நீண்ட காலத்துக்கு முன்னெடுத்துச் செல்வது சாத்தியமற்றது. எரிபொருள் பாவனையைக் குறைப்பதன் மூலம் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் நீண்டகால எதிர்பார்ப்பு என்றும் குறிப்பிட்டார்.
