மத்திய ஆப்பிரிக்க நாடான கொங்கோவில், 17ஆவது முறையாக எபோலா வைரஸ் பரவியுள்ள நிலையில், அந்தத் தொற்றுக்கு இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொங்கோ நாட்டில், அவ்வப்போது எபோலா வைரஸ் பரவல் தொடங்குவதும் அதனால், ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படும் அவலமும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இறுதியாக, கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட எபோலா பரவலில் 43 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், கொங்கோவின் இடூரி மாகாணத்தில் எபோலா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ளது. இதனால், இதுவரை 65 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 246 பேருக்குப் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து, சுரங்கங்கள் நிரம்பிய அதிக மக்கள் தொகையுள்ள பகுதியில் இந்தப் பரவல் ஏற்பட்டுள்ளது என்பதாலும், பாதிக்கப்பட்ட பகுதி தெற்கு சூடான் மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளின் எல்லைகளில் அமைந்துள்ளதாலும் அங்கு தீவிர கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கொங்கோவில் முதல்முறையாக 1976 ஆம் ஆண்டு எபோலா வைரஸின் பரவல் கண்டறியப்பட்டது. கடந்த 2018 முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான எபோலா பரவலில் சுமார் 1,000 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
மேலும், உள்நாட்டு மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளில் முறையான சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகள் கிடைப்பது மிகவும் சவாலான ஒன்றாக இருக்கின்றது. மேற்கு ஆப்பிரிக்காவில் கடந்த 2014 முதல் 2016 ஆம் ஆண்டு வரை ஏற்பட்ட எபோலா பரவலில் 11,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
