தன் சொந்தத் தங்கையைச் சிறு வயது முதலே தொடர்ந்து பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய 26 வயது அண்ணனுக்கு 18 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 24 பிரம்படிகளும் திங்கட்கிழமையன்று (மே 18) விதிக்கப்பட்டன. தம்மீதான குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஐந்து வயதாக இருந்தபோதே அவர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டார். அவரைக் கொடுமைப்படுத்திய அவரது அண்ணனுக்கு அப்போது 12 வயது.
பாலியல் வன்கொடுமை நீண்டகாலத்துக்கு நீடித்ததால் அச்சிறுமி மனத்தளவில் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். அவர் தமது கைகளை அறுத்துக்கொண்டு தன்னைக் காயப்படுத்திக்கொள்ளும் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், தமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைப் பற்றி சிறுமி தமது பள்ளி ஆலோசகரிடம் மனம் திறந்தார். பள்ளி ஆலோசகர் உடனடியாகக் பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்ததைத் தொடர்ந்து, குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி மேவிஸ் சியோங், மிக நீண்ட காலத்துக்கு இக்குற்றம் இழைக்கப்பட்டதையும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஏற்பட்டுள்ள ஆழமான உளவியல் பாதிப்புகளையும் கருத்தில்கொண்டு தண்டனை விதித்தார்.
