உலகம் அடுத்த கொள்ளைநோய் அபாயத்தை எதிர்கொண்டுவரும் வேளையில், நாடுகள் மெத்தனமாக இருக்கக் கூடாது என சிங்கப்பூர் சுகாதார அமைச்சரும் சமுதாயக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான ஓங் ஜீ கொங் கூறியுள்ளார்.
கொவிட்-19 நெருக்கடி நிலையைக் கடந்துவிட்ட போதிலும், மற்றுமொரு கொள்ளைநோய்ப் பரவலுக்கான அபாயம் இருப்பதாகவும் அதன் பாதிப்பு முந்தையதைவிடப் பேரழிவை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கக்கூடும் எனவும் அவர் எச்சரித்தார்.
ஆப்பிரிக்க நாடான கொங்கோ, உகண்டா ஆகிய நாடுகளில் பரவி வரும் எபோலா கிருமித் தொற்றை, உலகளவில் கவலையளிக்கும் பொதுச் சுகாதார நெருக்கடி என உலகச் சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், மற்ற வட்டாரங்களில் பரவி வரும் ஹண்டாவைரஸ் கிருமித் தொற்றையும் அவர் குறிப்பிட்டார்.
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் செவ்வாய்க்கிழமை (மே 19) நடைபெற்ற உலகளாவிய கொள்ளைநோய்க்கு எதிரான தயார்நிலை, தடுப்பு குறித்த மாநாட்டில் கலந்துகொண்டு அமைச்சர் ஓங் உரையாற்றினார்.
சிங்கப்பூர்த் தொற்றுநோய்த் தடுப்பு அமைப்பு, ராபர்ட் கோக் கழகம், உலகச் சுகாதார நிறுவனம் ஆகியவை இணைந்து இம்மாநாட்டிற்கு ஏற்பாடு செய்திருந்தன. 79வது உலகச் சுகாதாரச் சபை மாநாட்டின் ஓர் அங்கமாக இது நடத்தப்பட்டது.
