சிங்கப்பூரில் மின்தூக்கிக்குள் இளம்பெண் குத்திக் கொலை! மலேசிய இளைஞர் கைது!

சிங்கப்பூரின் சுவா சூ காங் (Choa Chu Kang) பகுதியில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக (HDB) அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மின்தூக்கிக்குள்ளே, 21 வயது இளம் பெண் ஒருவர் மிகக் கொடூரமாகக் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொலைச் சம்பவம் தொடர்பாக 22 வயது மலேசிய இளைஞர் ஒருவர் மீது சிங்கப்பூர் நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாகக் கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த மே 26ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு அரங்கேறிய இக்கோரச் சம்பவம் மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளிடையேயும் பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்ற ஆவணங்களின்படி, குற்றஞ்சாட்டப்பட்ட மலேசிய வாலிபர் முகமட் ஃபைஸ் உமர் ஆவார். இவர் கடந்த மே 26-ஆம் தேதி இரவு 8.53 மணி முதல் 9.22 மணி இடைப்பட்ட காலப்பகுதியில், சுவா சூ காங் அவென்யூ 2-இல் உள்ள பிளாக் 248 அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கி ஒன்றினுள் சக் பீ திங் என்ற இளம் பெண்ணைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கொலையுண்ட பெண்ணும், சம்பந்தப்பட்ட மலேசிய வாலிபரும் ஒருவருக்குப் பின் ஒருவர் நன்கு அறிமுகமானவர்கள் என்பது முதற்கட்ட பொலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும், அவர்களுக்கிடையேயான உறவின் பின்னணி என்ன என்பது நீதிமன்ற ஆவணங்களில் இன்னும் முழுமையாக வெளிப்படுத்தப்படவில்லை.

அன்று இரவு 8.55 மணியளவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏதோ அசம்பாவிதம் நடப்பதாகச் சிங்கப்பூர் பொலிஸாருக்கு அவசர அழைப்பு வந்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றபொலிஸார் மற்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள், அந்த அடுக்குமாடி குடியிருப்பின் 12ஆவது மாடியில் உள்ள மின்தூக்கி முகப்பில் சக் பீ திங் அசைவற்ற நிலையில் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டனர். அவரைச் சோதித்த மருத்துவக் குழுவினர், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர்.

அதே நேரத்தில், இரவு 9.00 மணியளவில் அந்தப் பகுதியில் மாபெரும் சத்தம் ஒன்று கேட்டுள்ளது. அந்த அடுக்குமாடி குடியிருப்பின் மேல் தளத்திலிருந்து கீழே குதித்த சந்தேக நபரான மலேசிய வாலிபர் ஃபைஸ் உமர், தரைத் தளத்தில் இருந்த பெரிய குப்பைத் தொட்டியின் மீது விழுந்து படுகாயங்களுடன் கிடப்பதைக் கண்டு குடியிருப்பாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

உயிருடன் மீட்கப்பட்ட அந்த மலேசிய வாலிபர் பலத்த பாதுகாப்புடன் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விசாரணையை அடுத்து, கொடூரம் நடந்த 12ஆவது மாடி மற்றும் வாலிபர் விழுந்து கிடந்த தரைத் தளம் ஆகிய இரு பகுதிகளையும் போலீசார் மஞ்சள் நிறத் தடுப்பு நாடாக்களால் மூடித் தீவிரத் தடய அறிவியல் சோதனைகளை மேற்கொண்டனர். இச்சம்பவத்தை அறிந்த பாதிக்கப்பட்ட இரு தரப்பு குடும்பத்தினரும் அடுக்குமாடிக் குடியிருப்பின் கீழ் தளத்தில் திரண்டு, கதறி அழுத காட்சி காண்போரை நெகிழச் செய்தது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மலேசிய வாலிபர் மீதான இந்த மாபெரும் கொலை வழக்கு, அடுத்தகட்ட விரிவான விசாரணைகளுக்காக வருகிற ஜூன் 18ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் சட்டப்படி கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவருக்குக் கடுமையான மரண தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles