குவைத் சர்வதேச விமான நிலையத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலைத் தொடர்ந்து அந்நாட்டில் வசித்து வரும் அனைத்து மலேசியர்களும் பாதுகாப்பாக இருக்கின்றனர் என மலேசிய வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து குவைத்தில் நிலவும் சூழ்நிலையை விஸ்மா புத்ரா தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத் சர்வதேச விமான நிலையத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், அனைத்து வர்த்தக விமான சேவைகளும் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதனால் பயணத் திட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ள மலேசியர்கள் தங்களது விமான நிறுவனங்களை நேரடியாக தொடர்புகொண்டு மாற்று பயண ஏற்பாடுகள் மற்றும் விமான மறுதிட்டமிடல் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ளுமாறு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
