அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே சுமார் மூன்று மாத காலம் நிலவி வந்த போர் முடிவுக்கு வந்துள்ளது. இரு தரப்புக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது. எதிர்வரும் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை சுவிற்ஸர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் ஒப்பந்தம் கைச்சாத்தாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானுடனான ஒப்பந்தம் நிறைவடைந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதன்படி, ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படை முற்றுகை விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தனது அறிவிப்பில் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், உலகெங்கிலும் உள்ள கப்பல்கள் தங்களது செயல்பாடுகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்றும், எண்ணெய் ஏற்றுமதி மீண்டும் தொடங்குவதற்கான நேரம் இது என்றும் கூறியுள்ளார்.
போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர் வெள்ளிக்கிழமை முதல் ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படும் என்றும், கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானுடனான ஒப்பந்தத்தின்படி, ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் கட்டணமில்லாப் போக்குவரத்து நடைபெறும் என்று டொனால்ட் டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த மகத்தான ஒப்பந்தம் இப்பிராந்தியத்திற்கு அமைதியையும் பாதுகாப்பையும் கொண்டுவரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பல ஜனாதிபதிகள் ஈரானுடன் அமைதியை ஏற்படுத்தத் தவறினர், ஆனால் நான் உண்மையாகவே அமைதியை ஏற்படுத்தினேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடன் அமைதி ஒப்பந்தம் இறுதியானதை ஈரானும் உறுதி செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் தங்கள் நாட்டின் கடற்பகுதி அமெரிக்க ராணுவ முற்றுகையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
லெபனான் உள்ளிட்ட பிராந்தியத்தின் அனைத்து பகுதிகளிலும் போர் முடிவுக்கு வந்துள்ளதாக ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது. இதை ஈரானின் அரசு செய்தி நிறுவனமும் உறுதி செய்துள்ளது.
