இந்த வாரத்தில் ரொறன்ரோவில் கடும் வெப்பமான காலநிலை நிலவக்கூடும் என்பதால், ரொறன்ரோ மற்றும் தெற்கு ஒன்ராறியோவின் ஏனைய பகுதிகளுக்கு கனடா சுற்றாடல் திணைக்களம் மஞ்சள் நிற வெப்ப எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இவ்வாரத்தில் பகல் நேர வெப்பநிலை 30 பாகை செல்சியஸின் நடுப்பகுதியை எட்டக்கூடும் எனவும், காற்றில் உள்ள ஈரப்பதன் காரணமாக அது 45 பாகை செல்சியஸ் வரை உணரப்படலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த வெப்ப அலையானது திங்கட்கிழமை ஆரம்பமாகி, புதன் அல்லது வியாழக்கிழமை மாலை வரை நீடிக்கும் என கனடா சுற்றாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை இந்த வெப்ப அலையின் உச்சக்கட்ட நாளாக இருக்கும். சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 36 பாகை செல்சியஸை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தேசிய வானிலை நிறுவனம் தனது ஆலோசனைக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.
இந்த வெப்ப அலையின் போது, ஒன்டாரியோ குடியிருப்பாளர்கள் 38 முதல் 45 வரையிலான ஈரப்பதன் மதிப்பை உணரக்கூடும். மேலும், இரவு நேரங்களிலும் வெப்பநிலை 20 பாகை செல்சியஸிற்குக் கீழ் குறையாது என்பதால், வெப்பத்திலிருந்து தப்பிப்பது கடினமாக இருக்கும். வெப்பம் மற்றும் ஈரப்பதன் மிக்க காற்று, காற்றின் தரத்தை மோசமடையச் செய்யலாம்.
இதனால் காற்றின் தர ஆரோக்கிய குறியீடு அதிக ஆபத்துள்ள வகையை நெருங்கக்கூடும் எனவும் கனடா சுற்றாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உங்களையும் மற்றவர்களையும் பாதுகாத்துக் கொள்ள நடவடிக்கை எடுங்கள் – கடுமையான வெப்பம் அனைவரினதும் ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம். முதியவர்கள், தனியாக வசிப்பவர்கள் மற்றும் ஆபத்தில் உள்ள மற்றவர்களின் உடல்நலம் குறித்து நேரில் அல்லது தொலைபேசி மூலம் தினமும் பலமுறை விசாரித்துக்கொள்ளுங்கள். என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
