ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்பான ஐ.நா. பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில், பிரான்ஸ் பிரதிநிதிகள் பேசத் தொடங்கியதும், அமெரிக்க தூதுவர்கள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
ஐ.நா. மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க்கின் நான்கு ஆண்டு கால பதவிக்காலத்தை நீட்டிப்பதற்கு எதிராக வாஷிங்டன் வாக்களித்தது தொடர்பாக, அமெரிக்க மற்றும் பிரெஞ்சு அதிகாரிகளுக்கிடையே இணையத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, இந்த வெளிநடப்பு நடந்துள்ளது.
ஜெனீவாவில் உள்ள பிரான்ஸின் ஐ.நா. தூதரகம் சனிக்கிழமையன்று வெளியிட்ட பதிவில், அமெரிக்கா இனி “மனித உரிமைகளின் வழிகாட்டியாக” இல்லை என்றும், வடகொரியா, நிகராகுவா, மாலி மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுடன் தனித்து நிற்பதாகவும் குறிப்பிட்டிருந்தது.
இதற்கு எக்ஸ் (X) தளத்தில் பதிலளித்த ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் மைக் வால்ட்ஸ் , பிரான்ஸ் நாடு “அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இஸ்ரேல் போன்ற சுதந்திரமான, இறையாண்மை கொண்ட ஜனநாயக நாடுகளுக்கு உபதேசம் செய்வதோடு, உலகின் மிக மோசமான அடக்குமுறையாளர்களுடன் நெருக்கமாகச் செயல்படும்” ஒரு மனித உரிமைத் தலைவருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
வெளிநடப்பிற்குப் பிறகு, அமெரிக்காவின் மாற்றுப் பிரதிநிதியான டான் நெக்ரியா, பிரான்ஸ் தனது “மட்டம்தட்டும் மற்றும் மரியாதையற்ற பேச்சை” கைவிடும் வரை தங்கள் குழுவினர் தொடர்ந்து வெளிநடப்பு செய்வார்கள் என்று பாதுகாப்புச் சபையில் தெரிவித்தார்.
பாலஸ்தீனம் மற்றும் ஈரானில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் சர்வதேச சட்ட மீறல்களை விமர்சித்த வோல்கர் டர்க், ஐ.நா. பொதுச் சபையில் 144 ஆதரவு வாக்குகள், 10 எதிர்ப்பு வாக்குகள் மற்றும் 13 நடுநிலை வாக்குகளுடன் மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
