செம்மணி மனிதப் புதைகுழியில் எழுந்தமானமாக குழிகளை வெட்டி ஆய்வு செய்ய நீதிமன்றம் அனுமதி

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாய்வுத் தளத்தில் ஜி.பி.ஆர். ஸ்கான் செய்யப்பட்ட பகுதிகளில் முழுமையான அகழ்வுப் பணிகள் நிறைவுறாத நிலையில், எதிர்வரும் நாள்களில் எழுந்தமானமாக குழிகளை வெட்டி ஆய்வு செய்யுமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இடைக்காலக் கட்டளை பிறப்பித்துள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழியில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பரிசோதனைகள் தொடர்பான நிர்வாக ரீதியான கலந்துரையாடல் மற்றும் திறந்த நீதிமன்ற அமர்வு, நீதிவான் எஸ்.லெனின்குமார் தலைமையில் செம்மணி அகழ்வாய்வுத் தளத்தில் நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்றது.

இந்த அமர்வில் குற்றப் புலனாய்வுப் பிரிவினருடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா, சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையா, காணாமல்போனோர் குடும்பங்கள் மற்றும் ஓ.எம்.பி. சார்பிலான சட்டத்தரணிகள் மற்றும் யாழ். மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட
முக்கிய சமர்ப்பணங்கள்

01. தொல்லியல் அறிக்கை: தற்போதைய அகழ்வுப் பணிகள் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா மன்றுக்கு சமர்ப்பித்ததுடன், அகழ்ந்தெடுக்கப்பட்ட பெரும்பாலான என்புத் தொகுதிகளில் துப்பாக்கிச் சன்னம் துளைத்தது போன்ற அடையாளங்கள் இல்லை எனவும் நிபுணர்களால் தெரிவிக்கப்பட்டது.

02. எல்லைகளைத் தாண்டிய ஆய்வு: செம்மணி மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட சித்துப்பாத்தி இந்து மயானத்தின் தற்போதைய எல்லைச் சுவர்களுக்கு அப்பால், செய்மதிப் புகைப்படங்களை ஆதாரமாகக் கொண்டு ஸ்கான் மற்றும் அகழ்வுப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என சட்டத்தரணி க.சுகாஷ் சமர்ப்பணம் செய்தார்.

03. காலத்தை நிர்ணயிக்கும் பரிசோதனை: அகழ்ந்தெடுக்கப்படும் என்புத் தொகுதிகளுக்குக் காபன் – 14 பரிசோதனை மாத்திரமின்றி, தடயவியல் பொருள்களையும் அடிப்படையாகக் கொண்டு காலத்தை நிர்ணயிக்கும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் ஆணையாளர் சட்டத்தரணி மீராக் ரஹீம் மற்றும் சட்டத்தரணி குமரவடிவேல் குருபரன் ஆகியோர் கருத்துத் தெரிவித்தனர்.

04. நான்காம் கட்ட அகழ்வு: எழுந்தமானமாகக் குழிகளைத் தோண்டும்போது என்புத் தொகுதிகள் ஏதேனும் அடையாளம் காணப்பட்டால், அடுத்த கட்டமாக 4 வாரங்கள் வரை அகழ்வுப் பணிகளைத் தொடரத் தயாராக இருப்பதாக நிபுணர்கள் மன்றில் தெரிவித்தனர்.

சட்டத்தரணிகளின் சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதிவான், ஸ்கேன் செய்யப்பட்டு முழுமையாக ஆய்வு செய்யப்படாத பகுதிகளில் எழுந்தமானமாகக் குழிகளைத் தோண்டி ஆய்வு செய்யவும், தடயப் பொருள்கள் காணப்பட்டால் தொடர்ச்சியாக முழுமையான ஆய்வுகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டார்.

அத்துடன், யாழ். பல்கலைக்கழக ஆய்வு அறிக்கைகள் மற்றும் சமர்ப்பிக்கப்படாத ஏனைய அறிக்கைகளையும் மன்றில் தாக்கல் செய்யுமாறு கட்டளையிடப்பட்டது.

ஜி.பி.ஆர். ஸ்கான் பரிசோதனை அறிக்கை மற்றும் சான்றுப் பொருள்கள் தொடர்பான அறிக்கைகளைப் பெற்றுக்கொண்டு, கார்பன் – 14 பரிசோதனை குறித்த இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்கான அடுத்த கட்ட வழக்கு விசாரணை எதிர்வரும் 14ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles